நல் வரவு

தைலாபுரம் நியூஸ் தளம் தங்களை இனிதே வரவேற்கிறது

Friday, 16 November 2018

தைலாபுரத்தில் விமான ஓடுதளம்

சாலையில் விமானம் இறங்க ரூ.90 கோடியில் ஓடுதளம்
🛫🛬🚁

திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், விமானம் தரையிறங்குவதற்கான வசதிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்படுத்தவுள்ளது.

இயற்கை பேரிடர் உள்ளிட்ட அவசர காலங்களில், மீட்பு நடவடிக்கைகளில், ராணுவ விமானங்கள் ஈடுபடுகின்றன. இந்த விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், விமான நிலையத்தில் மட்டுமே, தரை இறங்க முடியும். அதனால், காலதாமதம் ஏற்படுகிறது.இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைகளில், சிறிய விமானங்கள் தரையிறங்கும் வசதிகளை செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக, 21 தேசிய நெடுஞ்சாலைகள் தேர்வு செய்யப்பட்டன. அதில், தமிழகத்தையும், புதுச்சேரியையும் இணைக்கும், திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையும் அடங்கும்.

இங்கு, விமான ஓடுதளம் அமைக்க, 90 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதனால், ஓடுதளம் அமைக்கும் பணிகளை, விரைவில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவக்கவுள்ளது.

இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இயற்கை சீற்றங்களால், கடலுார், விழுப்புரம், புதுச்சேரி அதிகம் பாதிக்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், விமான ஓடுதளம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, இச்சாலையில், புளிச்சபாலம் முதல் தைலாபுரம் வரை, 5 கி.மீட்டர் துாரத்துக்கு, 33 மீட்டர் அகலத்தில், விமான நிலையங்களில் உள்ளது போன்ற, கடினமான கான்கீரிட் சாலை அமைக்கப்படும்.

இப்பணிகளை துவக்கி, ஓராண்டிக்குள் முடிக்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விமானம் இறங்கும் நேரத்தில், சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படும்.

விமானம் தரையிறங்கியதும், தடங்கல் இன்றி, வாகனங்கள் செல்லலாம். ஓடுதளம் அமைக்கும் பணியால், போக்குவரத்து பாதிக்காமல் இருப்பதற்காக, மாற்று ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


நன்றி : தினமலர் நாளிதழ்
பதிவு செய்த நாள்: ஏப் 03,2018 23:12

No comments:

Post a Comment